வடகொரியா மிகப்பெரிய அணுகுண்டு பரிசோதனை!
Friday, September 9th, 2016வடகொரியா இதுவரையில்லாத அளவிற்கு மிகப்பெரிய அணுகுண்டு சோதனையை செய்து உள்ளதாக நம்பப்படுகிறது என்று தென்கொரியா இராணுவம் கூறிஉள்ளது. வடகொரியாவின் அணுகுண்டு பரிசோதனை மையம் அருகே 5.3 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் உணர்பட்டது என்று தெரியவந்து உள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பொருளாதார தடைகள் குறித்து கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச ஒப்பந்தங்களுக்கு மாறாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்துகிறது.
3 முறை அணுக்குண்டுகளை வெடித்து சோதித்துள்ள அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் அணுக்குண்டை விட பல மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியுள்ளதாக அறிவித்து, உலக அரங்கை அதிரவைத்தது. அதைத் தொடர்ந்து ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஆனாலும் வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை. இப்போது ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடியில் இறங்கிஉள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனை தளத்தில் 5.3 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தென் கொரியா ராணுவ அதிகாரி பேசுகையில், “நாங்கள் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு உள்ளது என்றே நம்புகிறோம். பரிசோதனை வெற்றிப் பெற்றதா என்பதை வெளிக்கொணர முயற்சிக்கிறோம். 10 கிலோடன் சக்திகொண்ட அணுகுண்டு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கலாம்,” என்று கூறிஉள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடகொரியா பரிசோதனை செய்த அணுகுண்டே இதுவரையில் அதிகளவு சக்திக் கொண்டதாக இருந்தது. 6 முதல் 9 கிலோடன் சக்திகொண்டது என்று கணிக்கப்பட்டது.
1945-ம் ஆண்டு அமெரிக்காவினால் அழிக்கப்பட்ட ஹிரோஷிமாவில் 15 கிலோடன் சக்தி கொண்ட அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது.
வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் தேசிய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டத்தை தென்கொரியா கூட்டி உள்ளது. வடகொரியாவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சீன நில அதிர்வு ஆய்வு கழகங்கள் உறுதி செய்துள்ளன. வெடிகுண்டு வெடிக்கப்பட்டதன் காரணமாக இந்த நிலஅதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என சீன நிலநடுக்க ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. வடகொரியா மீண்டும் அணுகுண்டு பரிசோதனையை செய்தது உறுதிசெய்யப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று ஐப்பான் எச்சரித்து உள்ளது.
Related posts:
|
|