வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடை – அமெரிக்கா!

Friday, November 24th, 2017

மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஐ.நா. சபையின் பொருளாதாரத் தடைகள் உலக நாடுகளின் கண்டனம், என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதேவேளை, அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால் வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய பொருளாதாரத் தடைக்கு அமெரிக்கா உரிய விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது. போர் தொடுத்தால் அமெரிக்காவை ஏவுகணைகளால் தகர்ப்பதாகவும் மிரட்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக தெரிவித்துள்ளார்..

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரான், சூடான், சிரியா போன்ற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் இணைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.இதன்மூலம் வடகொரியா மீதான கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது, வடகொரியாவுடன் பல கோடி ரூபாய்க்கு வர்த்தக தொடர்பு வைத்துள்ள ஒரு தொழிலதிபர், 13 நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts: