வடகொரியாவின் திடீர் முடிவு!

Saturday, April 21st, 2018

வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்று அந்தநாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட உத்தவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம் மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.

தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது நாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியமை ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.

பேச்சுக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

கிம் ஜாங் உன் உடனான பேச்சுக்கு டொனால்ட் டிரம்ப்பும் சம்மதம் கொடுத்துள்ள நிலையில் எதிர்வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: