ராம்குமார் மரணத்தில் வெளிப்படும் உண்மைகள்!

Thursday, November 17th, 2016

சுவாதி கொலை வழக்கில் கழுத்தறுபட்ட நிலையில் கைதாகி, சிறையிலேயே மின்சார வயரைக் கடித்ததாகச் சொல்லப்பட்டு, மர்ம மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு 40 நாட் களைக் கடந்துவிட்டது.

ஆனால், ராயப்பேட்டை பிணவறை வாசலிலேயே காத்திருந்து போஸ்ட்மார்ட்டம் (post mortem ) ரிப்போர்ட்டை வாங்கிச்சென்ற விசாரணை அதிகாரியும் மாஜிஸ்திரேட்டுமான தமிழ்ச்செல்வி அந்த ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் மரணத்துக்கான காரணம் மர்மமாகவே தொடர்கிறது.

இத்தனை நாட்கள் ஆகியும் பி.எம். ரிப்போர்ட்டை வெளியிடாத மர்மம் என்ன? அந்த ரிப்போர்ட்டில் அப்படி என்னதான் உள்ளது? விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு முந்தைய ராம்குமாரின் புகைப்படத்தை நம்மிடம் காண்பித்த போஸ்ட்மார்ட்டம் டீம் டாக்டர் ஒருவர், “சிறையில் இருந்த ராம்குமார் ஸ்விட்ச் போர்டை உடைத்து மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டான் என்றுதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், நன்றாக பரிசோதனை செய்து பார்த்துட்டோம். வாயில கரண்ட் ஷாக் அடிச்சதுக்கான காயமோ தடயமோ இல்லை.

இடதுபக்க மார்பில் மேலும் கீழும் ஸ்க்ரூ டைப்பில் இரண்டு காயங்கள் உள்ளன. இதை, பஞ்சர் ஊண்ட் (puncture wound) என்று சொல்லுவோம். வலதுகை தோள்ப்பட்டையில் பிறாண்டியது போன்ற காயம், தாடைப் பகுதியில் காயமும் இருந் தது. அப்படிப் பார்த்தால், மின்சாரமானது நெஞ்சுப் பகுதியில்தான் பாய்ந்துள்ளது. அதனால், நெஞ்சுப்பகுதியில் Electrocution என்றுதான் பி.எம். ரிப்போர்ட்டில் எழுதியுள் ளோம்” என்றவரிடம் “ராம்குமாரின் மரணம் எப்படி ஏற்பட்டது?’ என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யாராவது கொலை செய்து கரண்ட் ஷாக் வைத்திருந்தால் ஹிஸ்டோபெத்தாலஜி ரிப்போர்ட்டில் தெரிந்துவிடும். உணவில் ஏதாவது கலந்து கொடுத்து கொலை செய்திருந்தால் விஸ்ரா ரிப்போர்ட்டில் முழுமையாகத் தெரியும். ஆனால், சம்பந்தப்பட்டவரை மயக்கமடைய வைத்து கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்திருந்தால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் மட்டுமல்ல… ஹிஸ்டோபெத்தாலஜி, விஸ்ரா எந்த ரிப்போர்ட்டிலும் கண்டுபிடிப்பது சிரமம். காவல்துறையின் உண்மையான ஸ்பாட் இன்வெஸ்டிகேஷனில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்” என்று பகீரூட்டுகிறார்.

நாம் ராம்குமாரின் போட்டோவைக் கேட்க… “மெடிக்கோ லீகல் கேஸில் இவ்வளவு நேரம் பேசியதே எனக்கு ஆபத்துதான்’’என்றபடி நழுவினார் டாக்டர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4:32 மணிக்கு சிறை மருத்துவர் நவீன்குமாருக்கு தொடர்பு கொள்கிறார் ஆண் நர்ஸ். 3 நிமிடங்களில் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறார் டாக்டர் நவீன்குமார். ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளியபடி கொண்டு வரப்பட்ட ராம்குமாரின் உயிரை மீட்கப் போராடுகிறார். ஆனால், பல்ஸ் இல்லை. ஆனால், ராம்குமாரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட கிரேடு-2 வார்டன் கார்த்திக், “சாதாரண புட் பாய்சன்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளோம்’ என்று கேஷுவலாக சொல்லிவிட்டு போனை துண்டித்தார்.

108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தவரும் இவர்தான். ராம்குமாரின் வழக்கறிஞர் தொடர்பு கொண்டபோது பேசியதும் இவர்தான். “ஏன் அப்படி தவறான தகவலை கொடுத்தீர்கள்?’ என்று நாம் வார்டன் கார்த்திக்கை தொடர்புகொண்டு கேட்டபோது, “எனக்கு டைரக்ஷன் கொடுக்கப்பட்டது. அதனால், அப்படிச் சொன்னேன்” என்று முடித்துக்கொண்டார்.

அருகிலுள்ள, ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் “சிறைக் கைதியை இங்கு எப்படி அழைத்து வந்தீர்கள்?’ என சிறை டாக்டர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் நர்ஸுகளின் உயிரை வாங்கி விடுவார்கள். எப்படியும் ராம்குமாரை காப்பாற்ற முடியாது என்பது தெரிந்த பிறகு தான் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவரப் பட்டது உடல்.

ராம்குமார் இறந்த செய்தியை சிறை டாக்டர் நவீன்குமார், உயரதிகாரிகளுக்கு இன்பார்ம் பண்ணினாலும் ஈ.சி.ஜி. எடுத்து கன்பார்ம் பண்ணியது அரசு ராயப்பேட்டை மருத்துவமனையின் சீப் மெடிக்கல் ஆபீஸர் டாக்டர் சையத்துதான். இவர்கள் எழுதிய ஏ.ஆர். (accident register) காப்பியிலும் கூட வாயில் காயம் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை.

ராம்குமார் கரண்ட் வயரைக் கடிக்க வாய்ப்பே இல்லை.… இது, காவல்துறையின் வேற மாதிரி என்கவுன்ட்டர் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சிறையில் ராம்குமார் கடித்த ஸ்விட்ச் போர்டு இதுதான்’ என்று போட்டோ லீக் அவுட் ஆனது. எவ்வளவோ பெரிய வி.ஐ.பிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தும்கூட அவர்களது சிறை போட்டோக்கள் வெளியில் லீக் ஆனதில்லை.

ஆனால், ராம்குமார் தற்கொலைதான் செய்து கொண்டான் என்று பரப்புவதற்காக, விசாரணைக்கு வந்த மாஜிஸ்திரேட்டுடன் வந்தவர் எடுத்த புகைப்படத்தை சிறைத்துறை லீக் அவுட் செய்தது.

மாலை 6 மணிவரை ராயப்பேட்டையிலேயே இருந்து போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை பதைபதைப்போடு வாங்கிய மாஜிஸ்திரேட், இன்றுவரை அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எந்த ரிப்போர்ட்டும் இவ்வளவு காலதாமதம் ஆனதில்லை’ என்கிறார்கள் சட்டம் சார்ந்த மருத்துவர்கள்.

சனிக்கிழமை 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் முடிந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை 4-ந் தேதி புழலுக்கு விரைந்தது போஸ்மார்ட்டம் செய்த டாக்டர்கள் செல்வக்குமார், பாலசுப்பிரமணியன், வினோத், மணிகண்டராஜா ஆகியோர் களைக் கொண்ட டீம்.

ராம்குமார் தங்கியிருந்த டிஸ்பென்ஸரி வார்டில் 5 செல்கள் உள்ளன. இதில், மூன்றாவது செல்லில்தான் இரண்டு கைதிகளுடன் அடைக்கப்பட்டிருந்தான் ராம்குமார். நான்காவது செல்லில் 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களி டம் விசாரணை நடத்திய போது அச்சத்தில் கைதிகள் வாய் திறக்கவில்லை.

சேட்டு, செல்வக்குமார் என்கிற கைதிகள், ராம்குமார் மின்சாரக் கம்பியை பிடித்து தற்கொலை செய்ததைப் பார்த் தோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த சாட்சிகளைத்தான் சிறைத்துறை நம்பியுள்ளது.

ராம்குமார் மின்சார கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டான் என்பதற்கு வலு சேர்ப்பதுதான் சமீபத்தில் டில்லிராஜா என்ற கைதி மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற செய்தியும்! தொடர்ந்து தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், சூப்பிரெண்டண்ட் அன்பழகன் ஓய்வு பெறும் நிலையில் பழைய புகாரில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்குக் காரணம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யுமான கருப்பண்ணன் மற்றும் விஜிலென்ஸ் டி.எஸ்.பி சேகரும்தான் என்று உள்ளிருந்தே’ சொல்கிறார்கள்.

கைதிகளின் நலனில் அக்கறையோடு செயல்படுபவர் என்று பெயர் எடுத்த சூப்பிரெண்டண்ட் அன்பழகனை காலி செய்வதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் இவர்கள் ஓய்வுபெறும்போது காலி செய்துவிட்டார்கள் என்று புலம்பிக்கொண்டிருக்கிறது அன்பழகன் தரப்பு.ராம்குமார் விவகாரத் திலும் டி.ஐ.ஜி. தரப்பின் லிங்க் உள்ளது என்கிறார்கள் சிறைக்கைதிகள்.

ராம்குமார் சுவாதியை பேஸ்புக்கில் பழக்கமாக்கித்தான் கொலை செய்தார் என்று காவல்துறையினரால் பரப்பப்பட்டது. நாம் ராம்குமாரின் பேஸ்புக்கை ஆராய்ந்தபோது அவர்களுக் குள் பேஸ்புக் மூலம் எந்த நட்பும் இல்லை என்பது தெரியவந்தது.

ஆனால், சுவாதி கொலையான நாளிலிருந்தே சுவாதியின் பெயரை பேஸ்புக்கில் போட்டு சுவாதி குறித்த தகவல்கள் வருகிறதா என்பதையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான் ராம்குமார். மேலும், சுவாதி கொலைக்குப் பிறகு செல்லை ஸ்விட்ச் ஆப் செய்தால் ட்ரேஸ் பண்ணமுடியுமா? என்றும் தனது நண்பனிடம் சாட்டிங்கில் கேட்டிருக்கிறான் ராம்குமார். இப்படிப்பட்ட டெக்னிக்கல் இன்பர்மேஷன்களை வைத்துதான் சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதுகிறது, விசாரணை காக்கிகள் தரப்பு.

ஆனால், ராம்குமாரோடு மட்டுமே விசாரணையை நிறுத்திக்கொண்டது.… ராம்குமாரை கைது செய்ததிலிருந்தே பிளேடால் கழுத்தறுப்பு,… நீதிமன்ற விசாரணைக்கு முன்பே வாயில் மின்சாரம் பாய்ந்து மரணம் என்பதெல்லாம் என பேச… சுவாதி கொலையில் மேலும் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக போலீஸின் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழும்பிக் கொண்டேதான் இருக்கின்றன. சுவாதி கொலை போலவே உண்மைகள் புதைக்கப்படுகின்றன ராம்குமார் மர்ம மரணத்திலும்.

FB_IMG_1467604912120-300x166

Related posts: