மெரினாவில் இளைஞர்கள் மீது தாக்குதல்!
Monday, January 23rd, 2017இளைஞர்களின் எழுச்சி காரணமாகவே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுநர் புகழாரம் சூட்டும் அதே நேரம், அதே இளைஞர்கள், காவல்துறையினரால் கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்படும் அவலம் நடந்தேறுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்டத் தொடரை தொடங்கி வைத்து, ஆளுநர் வித்யாசாகர் உரையாற்றினார்.
அப்போது, இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தால், இன்று ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும். அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் என்று கூறினார்.
மேலும், தமிழக அரசின் நடவடிக்கையால் வன்முறை இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் அவர் புகழ்ந்து பேசினார்.
ஆனால், ஆளுநர் யாரை புகழ்ந்து பேசினாரோ, அதே இளைஞர்கள், சென்னை மெரினாவிலும், திருவல்லிக்கேணியிலும், காவல்துறையினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர். கல்வீசி தாக்கப்பட்டு வருகின்றனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்து வருகிறார்கள் காவல்துறையினர்.
ஒரே தரப்பினருக்கு, மாநில சட்டப்பேரவையில் புகழாரமும், மறுபக்கம் தடியடியும் நடத்தப்பட்டு வருவது இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Related posts:
|
|