மிகப்பெரிய தவறை ஈரான் இழைத்திருக்கிறது – டிரம்ப் குற்றச்சாட்டு!

Friday, June 21st, 2019

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

எனினும், இதுமனித தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறிய அதிபர், ஈரான் வேண்டுமென்றே செய்திருக்கும் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஈரானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், ஈரானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

சமீபத்தில் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கா ஈரான் நாட்டு பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஸாரிஃப், ஐ.நா சபையில் அமெரிக்கா மீது புகார் ஒன்றையும் தர போவதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் உளவு பார்க்கும் நோக்கில் பறந்ததாக ஈரானின் ஐ.நாவுக்கான தூதர் மஜித் தக் ரவஞ்சி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தின் ஒரு அப்பட்டமான விதிமீறல் என்றும் மஜித் அமெரிக்காவை சாடியுள்ளார்.

ஐ.நாவின் பொது செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபைக்கு மஜித் எழுதியுள்ள கடிதத்தில், ஈரான் எல்லையை பாதுகாக்கும் விதத்தில் விரோத செயல்களை முறியடிக்கும் முழு உரிமை ஈரானுக்கு இருக்கிறது என்றும், ஈரான் போரை விரும்பவில்லை என்றும் மஜித் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

அது ஈரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக ஈரான் நாட்டு பத்திரிகை கூறியுள்ளது. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் நடுவில் தற்போது இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related posts: