பல முறை பணம் எடுப்பதை தடுக்க அழியாத மை!

Tuesday, November 15th, 2016

வங்கிகளில் ஏற்படும் அதிக நெருக்கடியை தவிர்க்கவும், ஒருவரே அடிக்கடி பணம் மாற்றுவதை தவிர்க்கவும், பணம் மாற்ற வருபர்களின் கையில் அழியாத மை வைக்கப்படும் என்று இந்திய பொருளாதார விவகார அமைச்சக செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்த சக்தி காந்த தாஸ், “வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களிலும் அதிக நபர்கள் வரிசையில் காத்திருக்க முக்கிய காரணம் பணம் மாற்ற ஒரே நபர்கள் மீண்டும், மீண்டும் வெவ்வேறு வங்கிகளுக்கும்,ஏ.டி.எம்களுக்கும் சென்று வருவது தான்” என்று கூறினார்.

சிலர் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை மாற்ற முயற்சி எடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த சக்திகாந்த தாஸ், இப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இனி வங்கிகளின் கவுண்டர்களில் பணம் மாற்ற வருபவர்களின் கைவிரலில் அழியாத மை வைக்கப்படும். இந்த மை வைக்கும் திட்டம், இன்று முதல் பெரிய நகரங்களில் துவங்கப்படுகிறது. என்று தெரிவித்துள்ளார்.

போதுமான ரூபாய் நோட்டுகள் வங்கிகளின் கையிருப்பில் இருப்பதாகவும், நாளுக்கு நாள் இது மேம்பட்டு வருவதால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சில நிதி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும் சமூகவலைத்தளங்களில் இது தொடர்பாக வெளிவந்த படங்கள் 2015-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்று கூறிய சக்திகாந்த தாஸ், இதனை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

_92445315_bankque (1)

Related posts: