பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி!

Thursday, June 2nd, 2016

சோமாலியா தலைநகரான மொகதிஷுவில் உள்ள ஹோட்டல் மீது பயங்கரவாதிகள் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சோமாலியா ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மொகதிஷுவில் அமைந்துள்ள அம்பாஸிடர் ஹோட்டல் வாசலில் நேற்று மாலை 6 மணியளவில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட வாகனம் மோதி வெடித்தது. இதில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறி இறந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் ஹோட்டலுக்குள் நுழைந்த மூன்று பயங்கரவாதிகள் அங்குள்ளவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

இதுகுறித்து தகவலறிந்த ராணுவத்தினர், அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலுக்குள் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 2 எம்.பி.க்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு அல்-ஷஹாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது’ என்றார்.

Related posts: