நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – ஸ்பெயின் பிரதமர் பதவியிழப்பு!

Saturday, June 2nd, 2018

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதையடுத்து ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பதவி விலகினார்.

பழமைவாத கட்சியின் தலைவரான ரஜோய் 2011ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் பிரதமராக இருந்தார். அவரது ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.

அவற்றில் ரஜோய் கட்சியை சேர்ந்த பலர் மீது குற்றச்சாட்டு, விசாரணைகள் நடந்து வருகின்றன.வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பழமைவாத கட்சியினரின் ஊழல்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. விசாரணைக்கு தேவைப்பட்டால் பிரதமரே ஆஜராக வேண்டியிருக்கும் என்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் 2 நாட்களாக நடந்தது.கடைசி நாளில் பேசிய ரஜோய், எங்கள் கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதை மறுக்கவில்லை.

அதே சமயம் எங்கள் கட்சியே ஊழல் கட்சி என்பதை ஏற்க முடியாது. சோஷலிஸ்ட்கள் தங்களை உத்தமபுத்திரர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். இவர்கள் ஒன்றும் அன்னை தெரசாவை போன்றவர்கள் அல்ல, என்றார்.350 பேர் கொண்ட பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 180 பேரும், எதிராக 169 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

தீர்மானத்தை கொண்டுவந்த சோஷலிஸ்ட் கட்சிக்கு வெறும் 84 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.ஆனால் ஓட்டெடுப்புக்கு முன்னதாக கேட்டலோனியன் பிரிவை விரும்புபவர்கள் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.இதனால் ரஜோய் பதவியிழந்தார்.

ஸ்பெயினின் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்று பதவி இழக்கும் முதல் பிரதமர் மரியானோ ரஜோய் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: