திறக்கப்பட்டது எகிப்தின் ரஃபா எல்லை – பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் சென்றடைந்தது நிவாரணப் பொருட்கள்!

Sunday, October 22nd, 2023

எகிப்தின் ரஃபா எல்லை திறக்கப்பட்டு பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 15ஆவது நாளாக நீடித்தது.

காஸா பகுதி மக்களுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக லெபனானின் எல்லையை ஒட்டி வசிக்கும் சுமார் 20 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பலஸ்தீனத்தின் காஸா பகுதி, இஸ்ரேல் மற்றும் எகிப்து நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துள்ளது.

கடந்த 9ஆம் தினதி முதல் காஸா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இராணுவம் நிறுத்திவிட்டது. மேலும் காஸா பகுதிக்கு நிவாரண பொருட்களை அனுப்ப இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து சவுதி, கத்தார், சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறுநாடுகள் மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில் சரக்கு விமானங்கள் மூலம் எகிப்தின் அல் ஆரிஷ் விமான நிலையத்துக்கு சுமார் 3,000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இவை சுமார் 200 இற்கும் மேற்பட்ட லொரிகளில் ஏற்றப்பட்டு எகிப்து- காஸாவின் ரஃபா எல்லை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆனால் இஸ்ரேல் போர் விமானங்கள் ரஃபா எல்லைப் பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தியதால் ரஃபா எல்லையை திறந்து நிவாரணப் பொருட்களை காஸாவுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முயற்சியால் நிவாரணப் பொருட்களை காஸாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அரசு அனுமதி அளித்தது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் நேற்றுமுன்தினம் எகிப்தின் ரஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இதைத் தொடர்ந்து எகிப்தின் ரஃபா எல்லை நேற்று திறக்கப்பட்டு முதல்கட்டமாக 20 லொரிகளில் நிவாரணப் பொருட்கள் காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து ஐ.நா.வின் பலஸ்தீன அகதிகளுக்கான அமைப்பின் தகவல் பிரிவு இயக்குநர் ஜூலியட் கூறியதாவது:

எகிப்தில் இருந்து முதல்கட்டமாக 20 லொரிகளில் காஸாவுக்கு நிவாரணப் பொருட்கள் வந்துள்ளன. இதில் 4 லொரிகளில் மருந்துப் பொருட்களும், இதர லொரிகளில் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட்டு உள்ளன.

மொத்தம் உள்ள 23 இலட்சம் காஸா மக்களுக்கு இந்த நிவாரண உதவிகள் போதாது. தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் கிடைத்தால் மட்டுமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும். என்று ஜூலியட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: