ஜோர்ஜ் பிளாய்ட் கொலைக் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிப்பு!

Saturday, June 26th, 2021

பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் திகதி மினியாபோலீஸ் நகரிலுள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கினார். அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டொலர் போலிப்பணம் இருந்ததாக கடையின் ஊழியர் பொலிஸுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் தலைமையில் 4 பொலிசார் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் முறைப்பாடு தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜோர்ஜ் பிளாய்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை முழங்கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜோர்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.

ஜோர்ச் பிளாய்ட் கழுத்தில் பொலிஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதையடுத்து, ஜோர்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது.

இனவெறிக்கு எதிராகவும், பொலிசாரின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கின.

இதற்கிடையே ஜோர்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 பொலிஸார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

இதில் டெரிக் சாவின் உள்பட 4 பொலிஸாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றில் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

000

Related posts: