ஜல்லிக்கட்டு தடை :இன்று ஸ்டாலின் உண்ணாவிரதம்!
Saturday, January 21st, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி இன்று காலை சென்னையில் உண்ணாவிரதம் இருக்க போவதாக தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசே நேரடியாக அவசர சட்டம் கொண்டு வராததைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டம் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்றும், ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வரை திராவிட முன்னேற்ற கழகம் இப்பிரச்சினையில் அயராது குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதலமைச்சர் கூறியிருப்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த அவசர சட்டத்தை முன் கூட்டியே மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கொண்டு வந்திருந்தால் ஐல்லிக்கட்டு பொங்கல் அன்றே சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் ஜல்லிக்கட்டு தடைபடாத வகையில் காளைகளை மத்திய அரசும் தன் அறிவிக்கையில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, வாடிவாசலில் காளை மாடுகள் அவிழ்த்து விடப்படும் வரை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் அதில் கூறியுள்ளார்.
Related posts:
|
|