செல்பி ஆசை மரணத்தில் முடிந்தது!

Friday, June 24th, 2016

கங்கை நதியில் செல்பி எடுக்க முயன்றபோது அடுத்தடுத்து தவறிவிழுந்து நீரில் மூழ்கி நண்பர்கள் 7 பேர் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கலோனல் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சிவம். இவர் தனது நண்பர்களான சச்சின் குப்தா, போலு திவாரி, ரோஹித், மக்சூத், போலா, சத்யம், ஆகிய 6 பேருடன் நேற்று கங்கை நதியில் குளிக்கச் சென்றுள்ளார்.

சமீபத்திய மழை காரணமாக கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் நதியில் குளித்துக் கொண்டிருந்த சிவத்திற்கு ஆற்றின் நீரோட்டம் அதிகமுள்ள பகுதியில் செல்பி எடுத்து தனது நண்பர்களை ஆச்சர்யப்படுத்த விரும்பினார். இதற்காக நதியின் நீரோட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றார். பின்னர் செல்பி எடுக்க தயாரானபோது எதிர்பாராதவிதமாக ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.

அவரது அலறலை கேட்ட அவரது நண்பர் மக்சூத் அவரை காப்பாற்ற முயன்றார். இந்த முயற்சியில் அவரும் நீரில் மூழ்கினார். அடுத்தடுத்து நண்பர்கள் ஒருவரையொருவர் காக்கும் முயற்சியில் ஒவ்வொருவராக நீரில் குதித்தனர். ஆனால் வேகமான நீரோட்டத்தில் அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் நீர்மூழ்கி வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு 7 பேரின் சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. செல்பி எடுக்கும் ஆசையில் நண்பர்கள் உயிரை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: