சென்னையை புரட்டி எடுத்த வர்தா புயல்!

Tuesday, December 13th, 2016

சென்னையை கடும் சூறைக் காற்றுடன் புரட்டிப் போட்ட வர்தா புயல், சென்னை துறைமுகத்தில் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புயலின் சீற்றம் காரணமாக 7-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயம் அடைந்தனர். சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

சென்னையில் அதிக பாதிப்பை வர்தா புயல் ஏற்படுத்தியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலதாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 30ம் திகதி நடா புயல் உருவாகியது. இந்தப் புயலானது கரையைக் கடப்பதற்கு முன்பே வலுவிழக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், நடா புயலானது காரைக்கால் அருகே டிசம்பர் 2ம் திகதி கரையைக் கடந்தது.

தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 7ம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, விசாகப்பட்டினத்தின் அருகே நிலை கொண்டிருந்தது. அதனையடுத்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. வர்தா என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது தீவிர புயலாக மாறியது.

இந்தப் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. மணிக்கு மெதுவாக 2 கி.மீ. வேகத்தில் மட்டுமே நகர்ந்து கொண்டிருந்த புயலானது, ஆந்திர மாநிலம் நெல்லூர்-காகிநாடா இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புயலின் திசையானது மேற்கு தென்மேற்காக மாறத் தொடங்கியது. இதன் காரணமாக, புயலானது அதிதீவிர புயலாக மாறி சென்னையை நோக்கி நகரத் தொடங்கியது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது, சென்னைக்கு அருகே திங்கள்கிழமை நண்பகல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னைக்கு அருகில் 300 கி.மீ. தொலைவில் வர்தா புயல் வந்தபோதே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே மழை பெய்யத் தொடங்கியது.

வர்தா புயலானது திங்கள்கிழமை 2 பிரிவுகளாக மாறி கரையைக் கடந்தது. புயலின் மத்தியப் பகுதியானது திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3.30 மணி வரை கரையைக் கடந்தது.

இதன் காரணமாக திங்கள்கிழமை காலை முதலே சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கியது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சூறைக் காற்றுடன் மழை கொட்டத் தொடங்கியது. மழையும், காற்றும் ஒரு சேர அடித்தது. இதனால் சாலையில் மக்கள் நடமாட முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

புயலின் கிழக்குப் பகுதியானது மாலை 4 மணி முதல் 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகத்தாலும், மழையின் தாக்கத்தாலும் மக்கள் வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கினர்.

புயல் கரையைக் கடந்து நிலப்பகுதிக்குள் நகர்ந்து வர வர மேலும் வலுவிழக்கும். காற்றின் வேகமும் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:- அதிதீவிர புயல் வர்தா, சென்னை துறைமுகப் பகுதியில் நுழைந்து கரையைக் கடந்து திங்கள்கிழமை இரவு கிழக்கு திசையை நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும்.

புயல் கரையைக் கடந்த பிறகு, தொடர்ந்து வலுவிழக்கத் தொடங்கும். இதன் காரணமாக மழையின் தாக்கமும், காற்றின் வேகமும் குறையத் தொடங்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக 160 மி.மீ. மழையும், அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது என்றார் அவர்.

புயலானது கரையைக் கடந்தாலும், தென்தமிழக கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரையில் பலமான காற்று வீசக்கூடும்.

மேலும் தமிழகம், புதுவை கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் செவ்வாய்க்கிழமையும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலோரப் பகுதிகளில் குடிசைப் பகுதியில் வசிப்போர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

chennai-floods-photos

Related posts: