சசிகலா முதலமைச்சராவதற்கு இவ்வளவு மக்கள் எதிர்ப்பா?

Friday, January 6th, 2017

ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரானதற்கும், முதல்வராகும் முடிவுக்கும் பொதுமக்களிடையே கருத்துக் கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ‘ஒன்லைன்’ மூலம் நடத்தியது.

இதன் முடிவு சசிகலாவுக்கு பாதகமாகவே வந்துள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செந்தில் ஆறுமுகம் கூறுகையில்,

சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரானது தொடர்பாகவும் கடந்த டிசம்பர் 28-ம் திகதி முதல் ஜனவரி 1-ம் திகதி வரை கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம்.

அதன்படி ஒன்லைன் மூலம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பவர்களிடம் அவர்களின் வயது, மாவட்டம் உள்ளிட்ட விபரங்கள் மட்டுமே கேட்கப்பட்டன.

அதைப் பூர்த்தி செய்து விட்டு கருத்துக்கணிப்பில் பங்கேற்கலாம். இதில் சசிகலா முதல்வராவது, பொதுச் செயலாளராவது குறித்து இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

32 மாவட்டங்களிலிருந்து 3,090 பேர் கருத்துக்கணிப்பில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். இதில் 2,916 பேர், சசிகலா பொதுச் செயலாளரானதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது 94 சதவீதம்.

ஆதரவாக 174 பேர் மட்டுமே வாக்குப் போட்டுள்ளனர். இது 6 சதவீதம். அதுபோல முதல்வராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2,984 பேரும், ஆதரவாக 106 பேரும் வாக்களித்துள்ளனர். 97 சதவீதம் முதல்வராகுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப் பதிவாகி உள்ளது.20 வயது முதல் 40 வயது வரை 72 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்றார்

sasi jaya

Related posts: