கொரோனா தொற்று: பிரித்தானியாவில் மரண எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது!

Sunday, April 12th, 2020

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 917 உயர்ந்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 9,875 ஆக அதிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 வயதான குழந்தை ஒன்றும் உயிரிழந்தமை இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. NHS தகவல்களை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிவரை இடம்பெற்ற கொரோனா வைரஸுக்கு நேர்மறை பரிசோதனையில் மொத்தம் 9,875 தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

நேற்று சனிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, இதுவரை 334,974 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரிசோதிக்கப்பட்ட 269,598 பேரில், 78,991 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று தனது உயிரை காப்பாற்றியதற்காக லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், 1,775,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 108,558 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: