கம்பியூட்டர்கள் செயலிழப்பு: உலகம் முழுவதிலும் டெல்டா விமானங்கள் தரையிறக்கம்!

Tuesday, August 9th, 2016

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் விமான சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமாக டெல்டா ஏர்லைன்ஸ் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று அந்நிறுவனத்தின் விமானங்களை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அமைப்பு செயலிழந்ததால் உலகம் முழுவதிலும் புறப்படுவதற்கு தயாராக இருந்த அதன் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உலகம் முழுவதிலும் அந்நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ள விமானங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் செக்-இன் பகுதியில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருப்பது தொடர்பான புகைப்படங்களையும் டுவிட்டர் மூலம் பலர் வெளியிட்டனர்.

‘அனைத்து இடங்களிலும் எங்களுடைய தொழில்நுட்ப அமைப்பு செயலிழந்துள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நேரம் நீடிக்காது என நம்புகிறோம்.’ என்று டெல்டா ஏர்லைன்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முடங்கியது ஹேக்கிங் முயற்சியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இதுபற்றி விமான நிறுவனம் உறுதியான தகவல் தெரிவிக்கவில்லை.

Related posts: