ஐ.எஸ் அமைப்பிற்கு 6 இளம்பெண்கள் உட்பட 21 பேர் இணைப்பு!- ஒருவர் கைது!!

Wednesday, August 3rd, 2016

ஐஎஸ் ஆயுத இயக்கத்தில் இந்தியர்கள் 21 பேரை இணைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாலக்காடு, காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் உட்பட 21 பேர், கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென காணாமல் போனார்கள்.

இவர்கள் இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் ஐஎஸ் ஆயுத இயக்கத்தில் இணைந்து கொண்டதாகவும் தகவல் வௌியானது. இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த வைத்தியர் உள்ளிட்ட சில இளம்பெண்களை மதம் மாற்றி அழைத்து சென்றதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக கேரளபொலிஸார், மத்திய உளவுத்துறை, தேசிய புலனாய்வு துறை ஆகிய அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாயமான காசர்கோட்டை சேர்ந்த அப்துல்ரஷித் அப்துல்லா என்பவருக்கு பீகாரை சேர்ந்த யாஸ்மின் அஹமட் (29), என்ற இளம்பெண்ணுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மத்திய உளவுத்துறை உதவியுடன் தீவிர விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டனர். இந்த விசாரணையை அடுத்து யாஸ்மின் அஹமட்டை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். யாஸ்மின் அஹமட்டுடன் இருந்த அவரது 4 வயது மகளையும் பொலிஸார், அழைத்துச்சென்றதுடன் இரகசிய இடத்தில் வைத்து விசாரித்துள்ளனர். அப்போது அப்துல்ரஷித் உள்பட பலருக்கு சிரியா செல்ல இவர் உதவி செய்தது தெரியவந்ததுடன் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: