ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 வீரர்களைத் திரும்பப் பெறவுள்ள அமெரிக்கா!

Wednesday, November 18th, 2020

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈராக் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் உள்ள 7 ஆயிரத்து 500 நேட்டோ படை வீரர்களில் 5 ஆயிரத்து 200 பேர் அமெரிக்க வீரர்கள் ஆவர். இந்த நிலையில், ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் 2 ஆயிரத்து 500 பேரை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

இதேபோல், ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்களை கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், இந்த நடவடிக்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையிடமான பென்டகன் தெரிவித்தது.

இந்த நிலையில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2,500 அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை 4,500இல் இருந்து 2500 ஆக குறைக்கவும் ஈராக்கில் 3000 முதல் 2500 வீரர்களை திரும்பப்பெற ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க வீரர்களை சொந்த நாட்டிற்கு திரும்பக்கொண்டுவரும் நடைமுறை அதிகரித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: