இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு : ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது!
Wednesday, December 14th, 2022
கத்தார் நாட்டிடம் இலஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கத்தார் பணபலத்தை பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் கத்தார் அரசு இதை திட்டவட்டமாக மறுக்கிறது.
இந்நிலையில் கத்தார் நாட்டிடம் இலஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் பொலிஸார் கைது செய்தனர்.
எவா காயிலி உட்பட 4 பேரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உட்பட 16 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தி சுமார் 6 இலட்சம் யுரோ பறிமுதல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அலுவலகங்களில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதனிடைய இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிரீஸ் நாட்டை சேர்ந்த எவா காயிலி ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


