இரண்டாவது பெண் பிரதமராக தெரேஸா மே இன்று பதவியேற்பு!
Wednesday, July 13th, 2016பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேஸா மே இன்று மாலை பதவியேற்கவுள்ளார் .இதன் மூலம் அந்நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெயரை அவர் பெறுகிறார்.
அவர் நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கான போட்டியை மேலும் 9 வாரங்களுக்கு எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த அவரது போட்டி வேட்பாளரான அன்ட்றியா லீட்ஸம் திங்கட்கிழமை அந்தப் போட்டியிலிருந்து ஒதுங்கியதையடுத்து அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் பதவி விலகிச் செல்லும் பிரதமர் டேவிட் கமெரூன் தனது இராஜினாமா கடிதத்தை மகாராணியாரிடம் இன்று கையளிக்கவுள்ளார்.
அதேசமயம் 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியாவின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்த தெரேஸா மே, அந்தப் பதவியிலிருந்து விலகி பிரதமர் பதவியையேற்று தனது சொந்த அமைச்சரவைக் குழுவை நியமிக்கவுள்ளார்.
இந்நிலையில் தெரேஸா மே தனது புதிய பதவிப் பொறுப்பு குறித்துத் தெரிவிக்கையில், அந்தப் பதவியை பொறுப்பேற்பது குறித்து தான் கௌரவமடைவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் விலகலை வெற்றிகரமாக மேற்கொள்ள உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியையும் நாட்டையும் திறமையுடன் வழிநடத்தியுள்ளதாக டேவிட் கமெரோனுக்கு பாராட்டுத் தெரிவித்த தெரேஸா மே, தலைமைத்துவத்துக்கான போட்டியிலிருந்து கண்ணியத்துடன் விலகிய அன்ட்றியா லீட்ஸமிற்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் பிரித்தானிய தொழிற் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான ஜோன் திறிகெட், லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் கிறீன் கட்சியுடன் இணைந்து முன்கூட்டியே தேர்தலொன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தொழிற்கட்சியின் பொதுத் தேர்தல் ஒருங்கிணைப்பாளரும் அக்கட்சியின் தலைவரான ஜெரேமி கொர்பைனின் நெருங்கிய நண்பருமான ஜோன் திறிகெட், ஜனநாயக ரீதியில் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வது மிகவும் அத்தியாவசியமானது எனவும் அதனால் பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
முன்கூட்டியே பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை தெரேஸா மே நிராகரித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் அந்த ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது மற்றும் குடிவரவைக் கட்டுப்படுத்துவது உள்ளடங்கலான சவால்களை தெரேஸா மே எதிர்கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தெரேஸா மே 9 வாரங்களுக்கான தலைமைத்துவ போட்டியிலிருந்து விடுபட்டு 48 மணி நேர அறிவித்தலையடுத்து பதவியைப் பொறுப்பேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை அவருக்கு புதிய அமைச்சரவை குறித்து தீர்மானமெடுக்க போதிய கால அவசாசத்தை வழங்குவதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்திருப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த அவருக்கு, அந்த ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவளித்தவர்களுக்கு முக்கிய பதவிப் பொறுப்புகளை வழங்க நிர்ப்பந்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தெரேஸா மே, இன, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தமொன்றை முன்னெடுக்க உறுதியளித்துள்ளார். இது தற்போது உயர் பதவிகளிலுள்ள சிரேஷ்ட அரசியல்வாதிகளின் எதிர்காலம் தொடர்பில் ஊகங்கள் பரவ வழிவகை செய்வதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெரேஸா மேக்கு இறுதி வாக்கெடுப்பின் போது அதரவளித்த அந்நாட்டு முன்னாள் அதிபர் கென் கிளார்க், புதிய பிரதமர் தனது அமைச்சரவை நியமனங்களின் போது கட்சியில் சமநிலையைப் பேண வேண்டியுள்ளது எனக் கூறினார்.
2010 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற டேவிட் கமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா தொடர்ந்து இணைந்திருப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார். எனினும் இது தொடர்பில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அந்நாடு பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து அவர் பதவி விலகுவதாக அறிவிப்புச் செய்திருந்தார்.
டேவிட் கமெரோன் தனது பதவி விலகல் தொடர்பாக அறிவித்த பின் கூறுகையில், தெரேஸா மே எதிர்வரும் வருடங்களில் பிரித்தானியா எதிர்கொண்டுள்ள தேவைகளுக்கு ஏற்றவாறு அந்நாட்டை வழிநடத்தத் தகுதியுடைய ஒருவர் என பாராட்டுத் தெரிவித்தார்.
“அவருக்கு( தெரேஸா மேக்கு) எனது முழு ஆதரவும் உள்ளது” என அவர் கூறினார்.
பிரித்தானிய தலைமைத்துவத்துக்கான போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டமை தொடர்பில் அனட்றியா லீட்ஸம் கூறுகையில், பிரித்தானியா எதிர்கொண்டுள்ள நெருக்கடியான தருணத்தில் தலைமைத்துவத்துக்கான போட்டியை 9 வாரங்கள் நீடிப்பது விரும்பத்தக்கது அல்ல என்பதாலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்ததாகத் தெரிவித்தார். அவர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது பத்திரிகையொன்றுக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில் தெரேஸா மே பிள்ளைகளற்றவர் என்பதைக் குறிப்பிடும் வகையில் பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் தான் உள்துறை செயலாளரை விடவும் பிரதமர் பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் எனக் கூறியிருந்தமை குறித்து அனட்றியா லீட்ஸம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
Related posts:
|
|