அவுஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி!

Sunday, July 10th, 2016

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

அந்த நாட்டில் 1987–ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2–ம் திகதி தேர்தல் நடந்தது. இதன்படி பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்–சபையின் 76 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.

ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா’ என்கிற அளவில் கடுமையான போட்டி நிலவியது. வாக்குப் பதிவு முடிந்ததும் மாலையிலேயே வாக்கெண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே முடிவுகள் இழுபறியாக ஊசலாட்டத்துடனே வெளியாகின.

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 150 இடங்களை கொண்ட அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் 76 இடங்களை பிடிக்கும் கட்சிதான் அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி தற்போது 74 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் இரு இடங்களில் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி வெற்றி பெறாவிட்டாலும், ஆளும்கட்சிக்கு ஆதரவான மூன்று எம்.பி.க்கள் துணையுடன் அவுஸ்திரேலியாவில் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி விட்டது.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 66 இடங்களை பிடித்துள்ள நிலையில் லிபரல் கட்சியின் வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்கட்சி தலைவர் பில் ஷார்ட்டன் அவுஸ்திரேலியாவின் எதிர்கால பிரதமர் மால்கோம் டர்ன்புல்-லை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts: