அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களே காரணம் – ரஷ்யா குற்றச்சாட்டு!

Tuesday, March 1st, 2022

நாட்டின் அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட ஏனையவர்களே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக நோட்டோவிற்கும் மொஸ்கோவிற்கும் இடையில் சாத்தியமான “மோதல்கள்” ஏற்படுவது தொடர்பில்”ஏற்றுக்கொள்ள முடியாத” கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பஸ்கோவ் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யவை நிறுத்தாவிட்டால், ஏனைய நாடுகளும் அச்சுறுத்தப்படலாம் எனவும் அது நேட்டோவுடன் மோதலில் முடிவடையும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ட்ரஸ் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமது நாட்டின் அணு ஆயுதப் படையை எச்சரிக்கை நிலையில் வைத்திருப்பதற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்களே காரணம் என ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பஸ்கோவ் தெரிவித்த கருத்தை பிரித்தானியா நிராகரித்துள்ளார்.

வன்மம்மிக்க வார்த்தைப் பிரயோகத்தையோ மோதலை தீவிரப்படுத்தும் கருத்துக்களையோ பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவில்லை என பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் கூறியுள்ளது.

அத்துடன் நேட்டோ அமைப்பானது எப்போதுமே தற்காப்புக்கான கூட்டணி என்பதையே வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்தும் வலியுறுத்திவந்ததாகவும் உக்ரைனுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வொலஸ்சும் கருத்து வெளியிட்டுள்ளதுடன், எந்தவொரு தவறான கணிப்பீடுகளையும் தவிர்ப்பதற்கு பிரித்தானியா விரும்புவதாக கூறியுள்ளார்.

ரஷ்யவிற்கும் நோட்டோவிற்கும் இடையில் மோதல்கள் ஏற்படலாம் என பல்வேறு மட்டங்களில் பல்வேறு பிரதிநிதிகளால் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சராக இருந்தாலும் அவர்களின் பெயரை தாம் குறிப்பிடப் போவதில்லை என திமித்ரி பஸ்கோவ் கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், உக்ரைன் மீதான யுத்தத்தை ரஷ்ய நிறுத்தவிட்டால் அது ரஷ்ய – நோட்டோ போராக மாறலாம் என எச்சரித்திருந்தார்.

புடினை, உக்ரைனில் நிறுத்தவிட்டால், பால்டிக்ஸ், போலந்து, மோல்டோவா போன்ற நாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் எனவும் அது நேட்டோவுடனான யுத்தமாக மாறும் எனவும் கூறியுள்ள லிஸ் ட்ரஸ், அந்த இடத்திற்கு செல்ல விரும்பவில்லை எனவும் இந்த நீண்டகால மோதலானது, ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பானது எனவும் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளரின் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: