T- 20 உலக கோப்பை இன்று ஆரம்பம்!

Tuesday, March 8th, 2016

16 அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.

முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’ பிரிவில் வங்காளதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.

15-ம் திகதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆவுஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும்.

மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.

முதல் சுற்றில் நாக்பூரில் இன்று நடக்கும் ஒரு ஆட்டத்தில் தன்விர் அப்சல் தலைமையிலான ஹாங்காங் அணி, ஹாமில்டன் மசகட்சா தலைமையிலான ஜிம்பாப்வேயை (பிற்பகல் 3 மணி) எதிர்கொள்கிறது. இதில் அனுபவம் வாய்ந்த ஜிம்பாப்வே ஆதிக்கம் செலுத்துவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, பிரஸ்டன் மம்சென் தலைமையிலான ஸ்காட்லாந்துடன் மோதுகிறது.

Related posts: