23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி!

Friday, July 5th, 2019

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரில் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

எதிர்முனையில் களமிறங்கிய இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப்புடன் இணைந்து விளையாடிய ஹெட்மயர் 39 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஷாய் ஹோப் 77 ரங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 58 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தவ்லத் ஜட்ரன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குல்புதீன் நைப் 5 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் ரஹமத் ஷா உடன் ஜோடி சேர்ந்த இக்ராம் அலி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் ரஹமத் ஷா 62 ரன்னிலும், இக்ராம் அலி 86 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் பிராத்வெட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related posts: