10 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சியின் அனுமதியுடன் பாகிஸ்தானில் போட்டி!

Monday, September 23rd, 2019


பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சியின் அனுமதியுடன் போட்டி மத்தியஸ்தர் மற்றும் போட்டி நடுவர்கள் பாகிஸ்தான் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து எந்தவொரு போட்டி மத்தியஸ்தர் அல்லது நடுவர்களை அனுப்புவதற்கு ஐ.சி.சி மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே நாட்டு நடுவர்களை நியமித்து போட்டியை நடத்துவதற்கான அனுமதியையும் ஐ.சி.சி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தொடருக்கான நடுவர்களையும், போட்டி மத்தியஸ்தரையும் நியமிப்பதற்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலைமைகளை மதீப்பீடொன்றை முன்னெடுத்த பிறகு ஐ.சி.சியினால் இந்தத் தொடருக்காக மத்தியஸ்தர் ஒருவரும், போட்டி நடுவர்களும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அவுஸ்திரேலியாவின் டேவிட் பூன் இந்தத் தொடரின் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதுடன், இங்கிலாந்தின் மைக்கல் அன்ட்ரூ கோப் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் வில்சன் ஆகியோர் போட்டி நடுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அஹ்சன் ராசா, ஷொசாப் ராசா மற்றும் ஆசிப் யாகூப் ஆகியோரும் போட்டி நடுவர்களாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை அரசு பாதுகாப்பு தொடர்பில் இறுதி அறிக்கையொன்றை வழங்கியதையடுத்து அந்தத் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டது

Related posts: