உலகக் கிண்ண தொடர்: மலிங்கவின் குற்றச்சாட்டு!

Wednesday, June 5th, 2019


தோல்விகள் மூலம் பாடங்களை கற்காமல் தொடர்ந்தும் தோல்விகளை இலங்கை அணி சந்தித்து வருகின்றது என ஆப்கானிஸ்தானுடனான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் ஒரு போட்டியில் தோற்றுவிட்டோம் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுங்கள் என தெரிவித்து வருகின்றோம் ஆனால் பயன் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இவ்வாறு விளையாட முடியாது, நாங்கள் தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் தோல்விகளை மறப்பதில் பயனில்லை எனவும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு வீரர் போட்டி குறித்து அழுத்தம் பதட்டத்தை பரபரப்பை கொண்டிருக்காவிட்டால் அவரிடமிருந்து 100 வீதத்தினை பெறுவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அழுத்தத்தை உணராமல் விளையாட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யாவிட்டால் அவர்கள் அணிக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வீரர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அணியின் சிரேஸ்ட வீரர் என்ற அடிப்படையிலும் அணி வீரர் என்ற அடிப்படையிலும் அனைத்து வீரர்களும் தங்கள் கடமையை சரிவரச் செய்யாதது குறித்து அச்சப்படுவார்கள் தோல்வி குறித்து வெட்கமடைவார்கள் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றுமுதல் அவர்கள் அந்த அச்சத்தை கொண்டிருப்பார்கள் என கருதுகின்றேன் என தெரிவித்துள்ள லசித் மலிங்க இந்த 15 பேரும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர், சுற்றுலா மேற்கொள்வதற்காக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: