இந்திய அணியின் பயிற்சியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Saturday, August 17th, 2019


இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரோடு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்தது.

இதனால் இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனால் உலகில் இருந்து பல்வேறு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் விண்ணப்பித்தனர். இந்திய அணிக்கு பயிற்சியாளார் ஆக வேண்டுமென்றால், அவர்கள் ஐபிஎல் போன்ற தொடர்களில் குறித்த அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்க கூடாது என்ற விதிமுறையும் இருந்தது.

இதனால் ஐபிஎல்லில் குறிப்பிட்ட அணிகளில் பயிற்சியாளராக இருந்த சிலர், அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்து, இதற்காக விண்ணப்பித்தனர்.இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30 ஆம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்து இன்று தலைமை பயிற்சியாளருக்கான தேர்வு நடைபெற்றது.

பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் கோஹ்லி விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில், பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.

அதில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராகுவதற்கு உலகின் பல முன்னணி வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர். ரவிசாஸ்திரியால் தான் இந்திய அணியில் பிரச்சனை வருகிறது, அவர் கோஹ்லிக்கு ஆதரவாக இருக்கிறார். கோஹ்லி இவருக்கு ஆதவராக இருக்கிறார். இதனால் புதிய பயிற்சியாளர் வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் ரவிசாஸ்திரியே தெரிவு செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் தங்கள் புலம்பல்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஒரு ரசிகர் கடந்த முறை தேர்வின் போது, கும்ளே எந்த ஒரு வெற்றிகரமான சாதனைகள் படைக்கவில்லை என்று தான் அவரை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கினீர்கள், ஆனால் இந்த முறை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts: