வேகமான அரைச்சதம் கடந்த மொரிஸ்

Thursday, April 28th, 2016

நேற்றைய தினம் இடம்பெற்ற குஜராத் உடனான போட்டியில் கிரிஸ் மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் நேற்றைய தினம் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணியின் தலைவர் சஹீர்கான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. மக்கலம் 36 பந்துகளில் 60 ஓட்டங்களையும் ஸ்மித் 30 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டானர். டெல்லி தரப்பில் இம்ரான் தாஹீர் 3 விக்கெட்களையும், மொரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 173 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 16 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டீ கொக் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றமளித்தார். சாம்சன் 1 ஓட்டங்களுடனும், நாயர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனை தொடர்ந்து டுமினியுடன், பாண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருப்பினும் பாண்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி தோல்வி அடைந்துவிடும் என்றே கருதப்பட்டது.

அப்போது, டுமினியுடன், மொரிஸ் ஜோடி சேர்ந்தார். மொரிஸ் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். டுமினி சீரான இடைவேளையில் ஓட்டங்களை சேர்த்தார். ஒரு கட்டத்திற்கு மேல் மொரிஸ் 6 ஓட்டங்களாக விளாச ஆரம்பித்தார்.

அதிரடியாக விளையாடிய மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் விளாசினார். மொரிஸின் மாயாஜாலத்தால் ஆட்டம் டெல்லியின் பக்கம் திரும்பியது.

இதன்மூலம் டி20 போட்டிகளில் மூன்றாவது அதிவேக அரைச்சதம் எனும் சாதனையை படைத்தார். அத்துடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் யுவராஜ் சிங்கால் பெறப்பட்ட 12 பந்துகிலான அசை்சதமே சாதனையாக உள்ளது.

சிறப்பாக விளையாடி வந்த டுமினி 48(43) ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அப்போது டெல்லி அணி 17.1 ஓவர்களில் 144 ஓட்டங்களை எடுத்திருந்தது. தொடந்து அதே ஓவரில் மொரிஸ் இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசினார். கடைசி 2 ஓவர்களில் 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19 ஆவது ஓவரை பிரவீன் குமார் வீசினார். மிகவும் கட்டுக் கோப்பாக வீசி 4 ஓட்டங்களை மட்டுமே பிரவீன் விட்டுக் கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் பந்திலே மொரிஸ் பவுண்டரி ஒன்றை விளாசினார். இதனால் கடைசி 5 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் தலா ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்கப்பட்டது.

4 ஆவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். 5 ஆவது பந்திலும் இரண்டு ஓட்டங்கள் எடுக்க கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் பிராவோ நேர்த்தியாக பந்து வீச, அந்த பந்தில் இரண்டு ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மொரிஸ் 32 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் நான்கு பவுண்டரிகளும், 8 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

பிரவீன் குமார் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். குல்கர்னி 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது. இதனால் ஒரு ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. சுரேஷ் ரெய்னாவின் குஜராத் அணி தனது 5 ஆவது வெற்றியை பெற்றுக்கொண்டது.

Related posts: