விம்பிள்டன் தொடர்:  அரையிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!

Saturday, July 9th, 2016

விம்பிள்டன் அரையிறுதி போட்டியில் நட்சத்திரவீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

விம்பிள்டன் ஆடவர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார்.

நீண்ட நாட்களுக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல பெடருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அவருக்கு ரயோனிக் கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டில் 3-ம் நிலையில் இருக்கும் பெடரருக்கு 6-ம் நிலை வீரரான ரயோனிக் அதிர்ச்சி அளித்ததுடன் அந்த செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றினார்.

இதனால் அடுத்த செட்டில் பெடரர் சுதாரித்து விளையாடினார். இருந்தாலும் கனடா வீரர் கடும் நெருக்கடி கொடுத்ததால் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் பெடரர் 7(7)-6(3) அந்த செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டையும் 6-4 என பெடரர் வீழ்த்தினார்.

மூன்று செட்டுகள் முடிவில் பெடரர் 2-1 என முன்னிலையில் இருந்தார். இதே வேகத்துடன் அடுத்த செட்டையும் பெடரர் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெடரர் அந்த செட்டை 5-7 என கோட்டைவிட்டார். இதனால் வாழ்வா? சாவா? என்பதை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள்.

இதிலும் பெடரரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இறுதியில் ரயோனிக் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர் 18-வது பட்டத்திற்காக போராடி வருகிறார். கடைசியாக 2012-ம் ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்றார். அதன்பின் அவரால் ஒரு கிராண்ட்ஸ்லாம் பதக்கங்களை கூட வெல்ல முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: