வங்கத்திற்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!

Thursday, March 17th, 2016

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ண டி20 தொடரில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதிய லீக் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக சர்ஜல், ஷேஷாட் களமிறங்கினர்.

சர்ஜல் 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய ஷேஷாட் (52) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அப்ரிடி, ஹபீஸ் வங்கதேச பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர்.

ஹபீஸ் 42 பந்தில் 64 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), அப்ரிடி 19 பந்தில் 49 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

உமர் அக்மல் (0) நிலைக்கவில்லை. மாலிக் (15), இமாட் வாசிம் (0) ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ஓட்டங்களை குவித்தது.

வங்கதேச அணி தரப்பில், டஸ்கின், அரபட் தலா 2 விக்கெட்டுகளையும், சபீர் ரஹ்மான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 202 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேச அணி பாகிஸ்தான் பந்துவீச்சில் திணறியது.

விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்த வங்கதேசத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 55 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 50 ஓட்டங்கள் எடுத்தார். தமீம் இக்பால் 24, சபீர் 25, முஸ்பிஜூர் ரஹ்மான் 18 ஓட்டங்களை எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, அமீர் தலா 2 விக்கெட்டும், இமாட், இம்ரான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

துடுப்பாட்டம், பந்துவீச்சிலும் அசத்திய பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி ஆட்டநாயகானக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆசியக்கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது

Related posts: