மைதானத்தில் விஷேட அதிரடிப்படை:  இரசிகர்களுக்கும் தடை!

Thursday, August 31st, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை இடம்பெறவுள்ள நிலையில், மைதானத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போட்டி நடைபெறவுள்ள கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் 1000 பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் பணியில் ஈடுபடுவார்கள். சிவில் உடையிலும் ரசிகர்களுடன் ஒன்றாக இருந்து சில பொலிஸார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், விஷேட சி.சி.டி.வி கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதனிடையே, போட்டியை காண வரும் ரசிகர்கள் சில பொருட்களை கொண்டுவரவோ, பயன்படுத்தவோ தடை வித்திக்கப்பட்டுள்ளது.தேசிய கொடியை உயர்த்திப்பிடிக்க பயன்படுத்தும் பொருட்கள், மது, சிகரட், தீப்பெட்டி, கூரிய ஆயுதங்கள், கண்ணாடி போத்தல்கள், ஒலிப்பான்கள் (Horns) என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான, 3வது ஒருநாள் போட்டி கடந்த 27ம் திகதி நடைபெற்றது.

இதில், இந்தியாவின் வெற்றி ஏறத்தாள உறுதி செய்யப்பட்ட நிலையில், போட்டியைக் காண வந்த இரசிகர்கள் சிலர் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை மைதானத்திற்குள் வீசி எறிந்தனர்.

இதனால் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து, சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட போட்டி, பின்னர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதும் நடைபெற்றது.இந்நிலையிலேயே, நாளை இரு அணிகளுக்குமிடையிலான 4வது ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: