முதல் வெற்றி இங்கிலாந்து அணிக்கு!

Friday, June 2nd, 2017

ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இலண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கிடையே முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 இலக்குகளால் வெற்றியீட்டியுள்ளது.

இந்த போட்டியில் பங்களாதேஷை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களை குவித்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக தமீம் இக்பால் 128 (142) ஓட்டங்களும், முஸ்பிகுர் ரஹிம் 79 (72) ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 306 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ராய் மற்றும் ஹேல்ஸ் களமிறங்கினர். 3-வது ஓவரின் போது ராய் 1 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இதையடுத்து ஹேல்ஸ் – ஜோடி ரூட் ஜோடி ஓட்ட குவிப்பில் ஈடுபட்டது. இதில் ஆட்டத்தின் 28-வது ஓவரின் போது 95 (86) ஓட்டங்கள் எடுத்திருந்த ஹேல்ஸ் சபீர் ரஹ்மான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். கடைசியில் இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியில் ஜோ ரூட் 133 (129) ஓட்டங்களும், மோர்கன் 75 (61) ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

Related posts: