முச்சதம் எடுத்த கருண் நாயர்!

Tuesday, December 20th, 2016

 

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இளம் வீரர் கருண் நாயர் முச்சதமடித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ராஜ்காட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. விசாகப்பட்டனத்தில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மொகாலியில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. பின்னர், மும்பையில் நடைபெற்ற நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்களில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ( டிசம்பர் 16), இவ்விரு அணிகளுக்கும் இடையே ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னையில் தொடங்கியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இங்கிலாந்து அணியின் மொயீன் அலி அற்புதமாக விளையாடி சதமடித்தார். இறுதியில், அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் எடுத்தது.

பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் பார்தீவ் பட்டேல் ஆகிய இருவரும் முதலில் பொறுமையாக ஆடினர். அதற்குப்பின்னர் இருவரும் நன்கு அடித்தாட, முதல் விக்கெட் இணை 152 ரன்கள் சேர்த்தது.

இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் பந்துவீச்சில் லோகேஷ் ராகுல் 199 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நேற்றைய ( ஞாயிறுக்கிழமை) ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று (திங்கள்கிழமை) தொடர்ந்து ஆடிய இந்தியா, தொடக்கத்தில் முரளி விஜயின் விக்கெட்டை பறிகொடுத்தாலும்,கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தால், வலுவான நிலையை எட்டியது.

தான் விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்த கருண் நாயர், பின்னர் இரட்டை சதத்தையும் பதிவு செய்தார்.

67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் ஆட்டமிழந்த போதிலும், கருண் நாயர் தொடர்ந்து விளையாடி வந்தார். பின்னர், 381 பந்துகளில் தனது மூன்றாவது சதத்தை கருண் நாயர் பூர்த்தி செய்தார்.

தனது அறிமுக தொடரிலேயே, கருண் நாயர் முச்சதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏழு விக்கெட்டுகளை இழந்து 759 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

_93026306_9ccef6cc-6655-4a24-b6be-258684d4ff62

Related posts: