முக்காடு அணிய மறுத்து போட்டியை புறக்கணித்த முன்னாள் உலக சாம்பியன்!

Monday, October 31st, 2016

முக்காடு அணிய மறுத்து ஈரானில் நடைபெற இருக்கும் 9-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பின்ஷிப்ஸ் தொடரை இந்திய வீராங்கனை புறக்கணித்துள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் டிசம்பர் மாதம் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பெண் வீராங்கனைகள் துப்பாக்கி சுடும் போட்டி நடக்கும் இடத்திலும், ஈரானின் பொது இடங்களிலும் அந்நாட்டின் விதி மற்றும் கட்டுப்பாட்டின்படி முக்காடு போட்டுதான் செல்வது அவசியம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் பெண்களுக்கான 10 மீற்றர் ஏர்ரைபிள் பிரிவின் முன்னாள் உலகச் சாம்பியனும், இந்தியாவின் முன்னணி வீராங்கனையுமான ஹீனா சித்து ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தொடரை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹீனா சித்து கூறுகையில், சுற்றுலா பயணிகள் அல்லது வெளிநாட்டு விருந்தினர்கள் கட்டாயம் முக்காடு அணிய வேண்டும் என்று வற்புறுத்துவதுபோல், வீராங்கனைகளை வற்புறுத்துவதை நான் விரும்பவில்லை.

ஆகவே, இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறேன். உங்களுடைய மத நம்பிக்கையை நீங்கள் கடைபிடிக்கலாம். ஆனால் அதை மற்றவர்கள் மீது திணிப்பதில் உடன்பட முடியாது என்று கூறியுள்ளார்.

இவரது முடிவு குறித்து இந்தியாவின் தேசிய ரைபில் அசோசியேசன் தலைவர் ரனிந்தர் சிங் கூறுகையில், நாங்கள் ஈரான் சூட்டிங் பெடரேசன் உடன் நல்ல உறவு வைத்துள்ளோம். அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்.

சுற்றுலா பயணிகள் அல்லது உயர்மட்ட அதிகாரிகள் என யாராக இருந்தாலும் ஈரான் சென்றால் முக்காடு அணிய வேண்டும். ஹீனாவைத் தவிர மற்ற அனைத்து இந்திய வீராங்கனைகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றார். ஹீனா 2013-ம் ஆண்டும் இதுபோன்று 6-வது ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தொடர் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: