பெத்தும் நிஸ்ஸங்க சதம் – அவுஸ்திரேலியாவை மீண்டும் வென்றது இலங்கை அணி!

Monday, June 20th, 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் ட்ராவிஸ் ஹெட் 70 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் 62 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 49 ஓட்டங்களையும், க்ளென் மெக்ஸ்வெல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் ஜெப்ரி வெண்டர்சே 49 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 11 நான்கு ஓட்டங்கள், 02 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 137 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் பெற்ற முதல் சதம் இதுவாகும்.

அத்துடன், குசல் மெண்டிஸ் 8 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 85 பந்துகளுக்கு முகங்கொடுத்து 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்போது, அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் போட்டியின் இடைநடுவே வெளியேறியிருந்தார்.

மேலும். தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 25 ஓட்டங்களையும் அணிசார்பில் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய க்ளென் மெக்ஸ்வெல் 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இதற்கமைய, இலங்கை அணி 2 -1 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது. அத்துடன், குசல் மெண்டிஸ் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் 170 ஓட்டங்களை இணைப்பாட்டமா பெற்றனர்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருவர் இணைப்பாட்டமாக பெற்ற அதிக ஓட்டமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: