பூப்பந்தில் யாழ். மாவட்ட அணி  சம்பியன்!

Wednesday, April 11th, 2018

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டத் தொடரில் ஆண்களுக்கான குழு நிலைப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட ஆண்கள் அணி சம்பியனானது.

மன்னார் மாவட்ட உள்ளரங்கில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் மன்னார் மாவட்ட அணியை எதிர்த்து யாழ்ப்பாண மாவட்ட அணி மோதியது. மூன்று ஒற்றையர், இரண்டு இரட்டையர் செற்களைக் கொண்டதாக இறுதியாட்டம் அமைந்தது.

முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியின் சார்பில் கீர்த்தனன், மன்னார் மாவட்ட  அணியின் சார்பில் சிவியன் மோதினார். 21:19, 21:11 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கீர்த்தனன் வெற்றி பெற்று யாழ்ப்பாணம் மாவட்ட அணிக்கு 1:0 என்ற முன்னிலையை வழங்கினார்.

இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியின் சார்பில் றொமின்சன், மன்னார் மாவட்ட அணியின் சார்பில் நிசான்பாலன் இருவரும் மோதினர். றொமின்சன் 21:19, 21:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிரு செற்களையும் கைப்பற்றி யாழ்ப்பாண மாவட்ட அணிக்கு 2:0 என்ற முன்னிலையை வழங்கினார்.

மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியின் சார்பில் தர்சிலியன், மன்னார் மாவட்ட அணியின் சார்பில் நிலக்சன் இருவரும் மோதினர். 21:15, 21:11 புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றார் நிலக்சன். மூன்று ஒற்றையர் ஆட்டங்களும் முடிவடைய யாழ்ப்பாண மாவட்ட அணி 2:1 என்ற செற் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற முதலாவது இரட்டையர் ஆட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியின் சார்பில் றொமிசன், துசாந்தன் இணையும் மன்னார் மாவட்ட அணியின் சார்பில் நிலக்சன், சஜீவன் இணையும் மோதின. யாழ்ப்பாண மாவட்ட இணை 21:15, 21:18 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்றதை அடுத்து 3:1 என்ற செற் கணக்கில் மாவட்டச் சம்பியனானது யாழ்ப்பாணம் மாவட்ட அணி.

Related posts: