பி.வி.சிந்து வெற்றி ; இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

Monday, August 2nd, 2021

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து, சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோ உடன் மோதினார். சீறிய சிந்துசிந்துவின் ஆக்ரோஷம், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே வெளிப்பட்டது. இடதுகை வீராங்கனையான பிங்ஜியவோ-வால், சிந்துவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து எளிதாக வென்றார். இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில் சிந்து அதிரடியை தொடர்ந்தாலும், பிங்ஜியாவோவும் பதிலுக்கு அதிரடி காட்டினார். இதனால், இரண்டாவது செட்டில் 15-12 என மூன்று புள்ளிகளில் சிந்து முன்னிலையில் இருந்தார்.இதன்பின் சுதாரித்துக்கொண்ட சிந்து அடுத்த 6 புள்ளிகளைப் விரைவாக பெறத்தொடங்கினார். இதனால், இரண்டாவது செட்டை சிந்து 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, 2-0 என்ற நேர் செட்களில் பிங்ஜியவோவை தோற்கடித்தார்.இதன்மூலம், பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்று, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார். இதற்கு முன், இந்தியாவிற்கு பளூதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். சிந்துவின் டோக்கியோ பயணம்…டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் ஒரு செட்களைக்கூட விட்டுக்கொடுக்காமல் காலிறுதிச் சுற்றுக்கு சென்றார். காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில், நேற்று (ஜூலை 31) நடந்த அரையிறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ-யிங் உடன் மோதி 0-2 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: