பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் இடைநீக்கம்!

Saturday, February 22nd, 2020

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக அறிவித்தது.

அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார்.

இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் இருந்து அவர் ஒதுங்கி இருக்க வேண்டியதாகி விட்டது.

விசாரணைக்கு பிறகே அவருக்கு தடை விதிக்கப்படுமா? என்பது தெரியவரும். 29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒரு நாள் போட்டி மற்றும் 84 இருபது ஓவர் ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.

Related posts: