பங்களாதேஷ் வீரருக்கு 30 சதவீதம் அபராதம்!
Thursday, September 29th, 2016
பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றுமுன்தினம் மிர்புரில் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டவீரரின் கால்பேடை பந்து தாக்கியது. இதனால் எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்தனர்.
இதற்கு நடுவர் ஆட்டமிழப்பு கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த வங்காள தேச வீரர் சபீர் ரஹ்மான் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதனால் ‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வார்த்தைகள் பயன்படுத்துதல் அல்லது சைகை மூலம் கொச்சைப்படுத்துதல், தாக்குதல் அல்லது அவமதித்தல்’’ என்ற ஐ.சி.சி.யின் நன்னடத்தை விதிமுறையை அவர் மீறிவிட்டதாக போட்டி நடுவரிடம் மைதான நடுவர்களால் புகார் அளிக்கப்பட்டது.
சபீர் ரஹ்மான் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. வீரர்களின் நன்னடத்தையில் புதிய முறையை கடந்த 22-ம் திகதியில் இருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி ஒரு வீரர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்களின் குற்றத்திற்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளில் ஒரு வீரர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றால், அவர்களுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் கிரிக்கெட் அல்லது இரண்டு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்படும்.
Related posts:
|
|