தொடரை வென்றது வங்கதேசம்!
Sunday, October 2nd, 2016பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியின் 3ஆவது போட்டியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, அத்தொடரையும் கைப்பற்றியுள்ளது.
மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி அவ்வணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் தனது 7 சதத்தைப் பெற்ற தமிம் இக்பால், 118 (118) ஓட்டங்களைப் பெற்றார். தவிர, சபீர் ரஹ்மான் 65 (79), மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 32 (22) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் நபி, மிர்வைஸ் அஷ்ரப், றஷீட் கான் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
280 என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்திலிருந்தே தடுமாறி, 33.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 141 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ரஹ்மட் ஷா 36 (73), நவ்ரோஸ் மங்கல் 33 (38), நஜிபுல்லா ஸட்ரன் 26 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மொஷாரப் ஹொஸைன் 3 விக்கெட்டுகளையும் தஸ்கின் அஹ்மட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இத்தொடரின் 2ஆவது போட்டியில் தோல்வியடைந்த பங்களாதேஷ் அணி, இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், இத்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.இப்போட்டியினதும் இத்தொடரினதும் நாயகனாக, தமிம் இக்பால் தெரிவானார்.
Related posts:
|
|