சொந்த மண்ணில் இலங்கையை தடுமாறச் செய்த வங்கதேச வீரர்கள்!

Sunday, March 19th, 2017

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இலங்கை-வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சண்டிமலின் அசத்தல் சதத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 467 ஓட்டங்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் சகிப் அல் ஹசன் 116 ஓட்டங்களும், செளமிய சர்கர் 61 ஓட்டங்களும் மற்றும் முஸ்தபிகியுர் ரஹ்மான் 51 ஓட்டங்களும் குவித்து வங்கதேச அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

129 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இலங்கை துவக்க வீரர் கருண்ரத்னே தவிர அடுத்த வந்த வீரர்கள் சற்று நேரம் கூட தாக்கு பிடிக்க பிடியாமல் வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தில்வேரா பெரரா மற்றும் லக்மல் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கருணரத்னே சதம் கடந்து 126 ஓட்டங்களும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களும் எடுத்தனர்.

வங்கதேச அணி சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சகிப்அல்ஹசன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தற்போது வரை இலங்கை அணி 139 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளது. நாளைய கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதும், 2 விக்கெட்டுக்களை விரைவில் கைப்பற்றி 150 ஓட்டங்களுக்குள் இலங்கையை சுருட்டினால், வங்காள தேசம் அணி 150 ஓட்டங்களை சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஐந்தாவது நாள் ஆடுகளம் கடினமாக இருந்தாலும், தாக்குப்பிடித்து 150 ஓட்டங்களை எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் நாளைய ஆட்டம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும். சொந்த மண்ணில் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: