செயற்குழு வேண்டுமாம் உமர் அக்மல்!

Friday, August 25th, 2017

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உமர் அக்மல், தனக்கும் அணியின் பயிற்றுநர் மிக்கி ஆர்தருக்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு, செயற்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.

பயிற்றுநருக்கு எதிராக, பகிரங்கமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட உமர் அக்மல், அதற்குப் பதிலளிக்கும் போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த நற்பெயரைக் கொண்ட சிரேஷ்ட வீரர்கள், அரச ஊழியர்கள் ஆகியோரைக் கொண்டு, இந்தச் செயற்குழு அமைக்கப்பட வேண்டுமெனக் கோரிய அவர், தன் மீது அவமானப்படுத்தும் கருத்துகளை மிக்கி ஆர்தர் வெளிப்படுத்தினாரா என்பதைக் கண்டறிய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

இந்தச் செயற்குழுவால், தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமாயின், மிக்கி ஆர்தரிடம் மன்னிப்புக் கோரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், மாறாக, மிக்கி ஆர்தர் மேல் தவறு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுமாயின், அவரும் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த உமர் அக்மல், போதிய உடற்றகுதியை வெளிப்படுத்தாமை காரணமாக, இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வாரம் கருத்துத் தெரிவித்த அவர், பயிற்றுநர் மிக்கி ஆர்தர், தன் மீது மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாகவும், அதை அனைத்துப் பொதுமக்களுக்கும் இரசிகர்களுக்கும் வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Related posts: