குசல் பெரேரா கன்னி சதம்: இலங்கை அணி வலுவான நிலையில்!
Sunday, October 30th, 2016
ரங்கன ஹெரத் தலைமையிலான இலங்கை அணி சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
குறித்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஹராரே நகரில் உள்ள ஹராரே விளையாட்டு கழக சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.
நேற்றைய நாள் ஆட்டத்தில் இலங்கை அணி சார்பாக சகலதுறை வீரர் அசேல குணரத்னவும்,பந்து வீச்சாளர் லஹிரு குமாரவும் தங்களது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர். சிம்பாப்வே அணியன் பந்து வீச்சாளர் கார்ல் மும்பாவிற்கும் இது முதலாவது போட்டியாகும்.
இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன, கெளஷல் சில்வா ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களுடன் போட்டி ஆரம்பமானது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணிக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றினை மதிய உணவு இடைவேளை வரை கொடுத்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்த இடைவேளையின் பின்னர் ஆரம்பித்த போட்டியின் இரண்டாவது பகுதிநேரத்தின் போது 37.3 ஓவர்கள் நிறைவில் 123 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இலங்கை அணி தனது முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன தனது அரைச்சதத்தைக் கடந்து 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக சிறப்பான டெஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 பந்துகளுக்கு 56 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சுழல் பந்து வீச்சாளர் கிரேம் கிரம்மரின் பந்தில் டினோ மாவோயோவிடம் பிடிகொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்து இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் குசல் பெரேரா ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளஷல் சில்வா இணைந்து மிகவும் நல்லதொரு இணைப்பாட்டத்தை இரண்டாவது விக்கெட்டுக்காக வழங்கினார்கள்.
இந்த நிலையில் தேநீர் இடைவேளையின் பின்னர் 11 பவுண்டரிகள் உடன் 194 பந்துகளுக்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த கெளஷல் சில்வா மல்கோம் வல்லரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து தனது சதத்தை தவற விட்டார். இவருடன் துடுப்பாட்ட வீரராக நின்றிருந்த குசல் பெரேரா மிகவும் சிறப்பான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி தனது கன்னி டெஸ்ட் சதத்தினை 104 பந்துகளில் பூர்த்தி செய்தார்.
இந்த நிலையிலேயே கெளஷல் சில்வாவின் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸின் விக்கெட் பறிபோனது. கிரேமரின் பந்தில் விக்காட் காப்பாளர் பீட்டர் மூரிடம் பிடிகொடுத்து 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 50 பந்துகளுக்கு 34 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். தொடர்ந்து இலங்கை அணி 300 ஓட்டங்களைக் கடந்த நிலையில் 2 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் உடன் 121 பந்துகளுக்கு 110 ஓட்டங்களைப் பெற்றிருந்த குசல் பெரேரா கிரேமரின் பந்து வீச்சில் நான்காவது விக்கட்டாக ஆட்டமிழந்து சென்றார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் குசல் பெரேராவின் சதம் என்பவற்றின் துணையுடன் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 90 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்று மிகவும் வலுவான நிலையிலுள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது ஆட்டமிழக்காமல் உபுல் தரங்க 13 ஓட்டங்களுடனும், தனன்ஜய டி சில்வா 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக கிரேம் கிரமர் 21 ஓவர்களை வீசி 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மல்கோம் வால்கர் 6 ஓவர்களை வீசி 1 விக்கெட்டினையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


