ஐ.பி.எல் தொடர் – CSK அணியில் விளையாடிய மதீஷ பத்திரன விலகல்!

Monday, May 6th, 2024

ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன எஞ்சியுள்ள தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நாடு திரும்பவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் விரைவில் குணமடையவும் அந்த அணியின் நிர்வாகம் வாழ்த்தியுள்ளது.

இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷ பத்திரன 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில்,168 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: