உபுல் தரங்கவின் அதிரடி –  டாக்கா டைனமைட்ஸ் படுதோல்வி!

Monday, November 6th, 2017

5வது பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இதில், நடப்புச் சாம்பியனான டாக்கா டைனமைட்ஸ் மற்றும் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்டுள்ள சில்லெட் சிக்ஸர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் உபுல் தரங்க மற்றும் அன்ட்ரு பிளெட்சர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் 9 விக்கெட்டுக்களால் சில்லெட் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

பங்களாதேஷின் சில்லெட் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சில்லெட் சிக்ஸர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் தேர்ந்தெடுத்தது.

அதன்படி,களமிறங்கிய டாக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. டாக்கா டைனமைட்ஸ் அணி சார்பாக குமார் சங்கக்கார அதிகபட்சமாக 32 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.அணித் தலைவர் சகிப் அல் ஹசன் 26 ஓட்டங்களையும் , கிரென் பொல்லார்ட் 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் டாக்கா அணியினை மிரட்டிய சில்லெட் அணியின் நஸிர் ஹொசைன், லயம் பிளென்கமட் மற்றும் அபுல் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் 137 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய சில்லெட் சிக்ஸர்ஸ் அணி, 16.5 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களுடன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

சில்லெட் அணியின் துடுப்பாட்டத்தில், அவ்வணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திய இலங்கை வீரர் உபுல் தரங்க மொத்தமாக 48 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 69 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதோடு, மேற்கிந்திய தீவுகளின் அட்ன்ரு பிளெட்சர் 63 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.டாக்கா அணியின் பந்துவீச்சில் ஆடில் ரஷீட், ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிறப்பான துடுப்பாட்டத்திற்காக உபுல் தரங்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

0000

Related posts: