இளம் வீரரை விமர்சிக்கும் ரவிசாஸ்திரி!

Wednesday, September 18th, 2019


இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்டின் ஷாட் தேர்வு, சில நேரங்களில் அணிக்கு பாதகமாக முடிந்து விடுகிறது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் டி20 உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது. அதற்காக தகுதியான அணியை தெரிவு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

அணியில் விக்கெட் கீப்பர் பணிக்கு இளம் வீரர் ரிஷாப் பண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஷாட் தேர்வு சில நேரங்களில் அணிக்கு பாதகமாக முடிந்து விடுவதாக, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கவலையடைந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டிரினிடாட்டில் நடைபெற்ற போட்டியில் அவர் ஷாட்டை பார்த்தீர்கள் என்றால், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அந்த ஷாட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இரண்டு, மூன்று முறை அதேபோன்று முயற்சி செய்து அவுட்டாகியுள்ளார்.

உங்களது ஷாட் தேர்வு அணியை தோல்வி நிலைக்கு கொண்டு செல்லும். உங்களை அது கீழ்நோக்கி கொண்டு செல்வதை மறந்து விடுகிறீர்கள் என்பது குறித்து வலியுறுத்தப்படும். ஒருமுனையில் விராட் கோஹ்லி நிலையாக நின்று கொண்டிருக்கும்போது, மறுமுனையில் ரிஷாப் பண்ட் ஆட்டமிழந்தார்.

அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 22.3 ஓவரில் 164 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்படி ஆட்டமிழக்கும்போது, அணிக்கு பாதகமான நிலை ஏற்படுகிறது. உங்களுடைய இலக்கு களத்தில் நின்று போட்டியை சிறப்பாக முடித்து வைக்க சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது.

யாருமே தனது பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், போட்டி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியம். சில குறிப்பிட்ட தருணங்களில் ஷாட் தேர்வு என்பது மிகவும் முக்கியமானது. அதை ரிஷாப் பண்ட் புரிந்து கொள்ளாதவரை அவரால் அதை தடுக்க முடியாது. இதை புரிந்துகொள்ள எத்தனை போட்டிகளில் ஆட வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது ஒரு போட்டியாக இருக்கலாம், நான்கு போட்டியாக இருக்கலாம்.

அதை தாண்டி இருக்குமென நான் கருதவில்லை. அவர் கற்றுக் கொள்வார். அவர் போதுமான அளவிற்கு ஐ.பி.எல் போட்டியில் விளையாடியுள்ளார். இப்போது அவருக்கான நேரம் வந்துள்ளது. உலகரங்கில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை அவர் வெளிக்காட்ட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: