இன்று ஆரம்பமாகின்றது மூன்றாவது போட்டி!

Wednesday, August 3rd, 2016

இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கையில், தொடரின் மூன்றாவது போட்டி, இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு நாளை பேர்மிங்காமில் ஆரம்பிக்கவுள்ளது.

மேற்படி தொடரின், முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மிகப் பெரிய வெற்றியை பெற்று பதிலடி வழங்கியது.

இந்நிலையில், தற்போது இரண்டு போட்டிகளின் முடிவில் 1-1 என்றவாறு தொடர் சமநிலையில் காணப்படுகிறது. எனவே இன்று ஆரம்பிக்கும் மூன்றாவது போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக காணப்படுகிறது.

காயமடைந்துள்ள பென் ஸ்டோக்ஸ், குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஃபின் இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, ஓட்டங்களைப் பெற தொடர்ந்து தடுமாறி வரும் ஜேம்ஸ் வின்ஸூக்கு இப்போட்டி இறுதி வாய்ப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மறுபக்கம், முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த யசீர் ஷா, அப்போட்டியின் பின்னரான எதிர்பார்ப்பில் இரண்டாவது போட்டியில் சோபித்திருக்கவில்லை. எனவே அவரிடமிருந்த்து தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இங்கிலாந்துக்கு சவாலை வழங்க வேண்டுமாயின், வழமையாக சொதப்புகின்ற களத்தடுப்பு மேம்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி- மொஹம்மட் ஹஃபீஸ், ஷன் மசூட், அஸார் அலி, யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அசாட் ஷஃபிக், சஃப்ராஸ் அகமட், வகாப் றியாஸ், மொஹம்மட் ஆமிர், யசீர் ஷா, ரஹாட் அலி

எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி- அலிஸ்டியர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், கரி பலன்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஸ்டூவர்ட் புரோட், ஸ்டீவன் ஃபின், ஜேம்ஸ் அன்டர்சன்

Related posts: