சொந்த செலவில் இங்கிலாந்து செல்லும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உறுப்பினர்கள்!

Thursday, May 25th, 2017

இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் ஜயந்த தர்மதாச மற்றும் கே.மதிவாணன் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் சபையின் அழைப்பின் பேரில், இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகளாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இலங்கை கிரிக்கெட் சபையின் நிதி ஆலோசனைக் குழுவின் தலைவரும் முன்னாள் பொருளாளருமான திரு. நுஸ்கி மொஹமடும் இவர்களுடன் இணைந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் கடுமையான நிதிசார் வரைபுகளுக்கமைய, நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் துணைக்குழு உறுப்பினர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு தமது சொந்த செலவில் பயணமாவதற்கு ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால, செயலாளர் மொஹான் டி சில்வா, பொருளாளர் ஷம்மி சில்வா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோர் ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐசிசி நிர்வாக சபைக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் இடம்பெற்றவுள்ள ஆசிய கிரிக்கெட் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை சார்பாக, கிரிக்கெட் சபையின் உதவி செயலாளர் ரவீன் விக்ரமரத்ன பங்குபற்றவுள்ளார்.

மேலும் 12 விளையாட்டு செய்தி நிறுவனங்களுக்கு, தங்கள் நிறுவனம் சார்பாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடர் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு விளையாட்டு செய்தியாளரை பரிந்துரைக்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, அவ்வாறு செல்லும் ஊடகவியலாளர்களுக்கு  விமானப் பயணச்சீட்டு உள்ளடங்கலாக   ஐக்கிய இராட்சியத்தில் மேற்கொள்ளப்படும் இதர செலவினங்களுக்கு உதவக்கூடிய விதத்தில் ஒரு தொகை நிதி கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Related posts: