இந்திய அணியின் 500ஆவது டெஸ்டுக்கு விஷேட ஏற்பாடுகள்!
Saturday, September 17th, 2016
இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் இந்தியாவின் 500ஆவது டெஸ்டாகும். இதற்கு அனைத்து முன்னாள் அணித்தலைவர்களையும் அழைக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடர் இந்தியாவின் 500ஆவது டெஸ்ட் ஆகும். இதை மிகவும் சிறப்பாக கொண்டாட இந்திய சபை முடிவு செய்துள்ளது.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர்களான நரி கான்ட்ராக்டர், சந்து போர்டு, திலிப் வெங்சர்கார், கபில் தேவ், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சவுரங் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோரை அழைத்து சிறப்பிக்க உள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் சபையின் முக்கியத் தலைவரும், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ராஜீவ் சுக்லா கூறுகையில், இந்திய கிரிக்கெட் சபை இந்த டெஸ்டின் போது அனைத்து முன்னாள் தலைவர்களும் மைதானத்திற்கு வரவழைக்க விரும்புகிறது.
இந்தியாவின் முதன்மையான நான்கு மைதானங்களில் (சென்னை சேப்பாக், மும்பை வாங்கடே, கொல்கத்தா ஈடன் கார்டன், கான்பூர் க்ரீன் பார்க்) இதுவும் ஒன்று. அனைத்து முன்னாள் அணித்தலைவர்களுக்கும் மரியாதை செலுத்துவதற்கு இந்த டெஸ்ட் சரியானதாக இருக்கும். இதற்கான அனைத்தையும் இந்திய சபை செய்து வருகிறது.இதன்போது உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமும் இணைந்து இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு விருந்து அளிக்க இருக்கிறது என்றார்.
அனில் கும்ப்ளே அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். ராகுல் டிராவிட் இந்திய ஏ அணி அவுஸ்திரேலியாவில் விளையாடுவதால் அங்கு இருக்கிறார். அந்த தொடர் முடிந்த பின் இந்தியா திரும்புவார்.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சிக்கு பயன்படுத்தப்படும் நாணயம், 500 என்ற எழுத்து பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயமாக இருக்கும். இதனிடையே அனைத்து அணித்தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த நிலையில், அசாரூதினுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Related posts:
|
|